வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் ஏற்படுத்தப்படவுள்ள உழவர் நல சேவை மையத்தில், வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
உழவர் நல சேவை மையங்கள் :
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடப்பு 2025-2026 ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தாக்கலின் போது மாண்புமிகு வேளாண்மை துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 4000 வேளாண் பட்டதாரிகளும் 600க்கும் மேற்பட்ட வேளாண் பட்டையதாரர்களும் வேளாண் கல்வியை நிறைவு செய்கின்றனர். இவர்களின் படிப்பறிவும் தொழில்நுட்ப திறனும் உழவர்களுக்கு உதவியாக இருந்து வேளாண்மை செழிக்கும் வகையில் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவில் 1000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதற்காக 30% மானியமாக 3 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் உழவர் நல சேவை மையங்களுக்காக ரூபாய் 42 கோடி மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உழவர் நல சேவை மையத்தின் பணிகள் :
இத்திட்டத்தில் இணைய விரும்பும் பயனாளிகள் தங்கள் பகுதி விவசாயிகளின் தேவைக்கேற்ப உழவர் நல சேவைகளை வழங்கலாம்.இந்த சேவை மையங்கள் ரூ. 10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைத்திட வேண்டும். இத்திட்டத்தில் இணையும் பயனாளிகள் வேளாண்மை தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் மற்றும் வேளாண் விற்பனை குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதோடு வேளாண் இடுபொருட்கள் விற்பனை, வேளாண் சார்ந்த சேவை மையங்கள், பண்ணை இயந்திர வாடகை மையம் மற்றும் விளை பொருட்களை மதிப்புக்கூட்டுதல் போன்ற சேவைகள் வழங்கும் விதத்தில் அமைத்திட வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் ஒரு மையமும் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு மையமும் அமைத்திட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடன் பெற விண்ணப்பிக்கலாம் :
தமிழ்நாடு அரசு சார்பில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து உற்பத்தியை உயர்த்தும் வகையில் முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இணையும் பயனாளிகள் உழவர் நல சேவை மையங்களை சிறப்பாக நடத்தும் போது வேளாண்மை உழவர் நல துறையில் வழங்கப்படும் அனைத்து உரிமங்களும் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையப் பயனாளிகளுக்கும் வழங்கப்படும்.
எனவே, இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதிற்கு உட்பட்ட வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்த நபர்கள் வங்கிகளில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம். வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெற்ற பின்பு மானிய உதவி பெற https://www.tnagrisnet.tn.gov.in/kaviaDP/register என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தங்களது பகுதிக்குட்பட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply