சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (22.01.2025) தொடங்கி வைத்தார்.
பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையின் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.
சமூக ஊடகங்களில் இலவசம் என்று நாம் பார்க்கும் அனைத்திற்கும் ஒரு விலை இருக்கிறது. பொருளாதாரத்தின் முக்கிய கொள்கை என்னவென்றால், உலகத்தில் எந்த ஒன்றும் இலவசம் இல்ல என்பதுதான்.ஒருவர் தன் வாழ்நாளில் செய்ய முடியாத செயல்களை, மற்றொருவர் தனது வாழ்க்கையில் செய்து முடிப்பவரே சிறந்த அறிவாளி. ஒரு இடத்திலிருந்து மற்றொரு மாநிலம் அல்லது நாட்டிற்கு வேலை வாய்ப்பிற்கு செல்கிறார் என்றால் அந்த வேலைக்கான சுய அறிவு, விழிப்புணர்வுகள் மற்றும் வழிகாட்டுதல் முறையாக கிடைக்கப் பெற்றிருக்க வேண்டும். யார் சிறந்த அறிவாளி என்று பார்த்தால் மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து தனக்கான பாடத்தை கற்றுக்கொள்பவர் தான் சிறந்த அறிவாளி.
சமூக வலைத்தளங்களில் நாம் கற்றுக்கொள்ள நல்ல விசயங்கள் நிறைந்துள்ளது. சமூக வலைதளங்களை கையாளுவது என்பது இரண்டு பக்கமும் கூர்மையாக உள்ள கத்தியை கையாளுவது போன்றதாகும். இதில் சரிசமமான நிலை என்பது தான் மிகவும் முக்கியம். சமூக வலைத்தள பதிவுகளை நாம் எவ்வாறு கவனமாக கையாளவேண்டும். அது நமக்கு எவ்வாறு பாதுகாப்பு தருகிறது என ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும். எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எல்லோரும் சமூக, பொருளாதார, குடும்ப சூழ்நிலைகளில் ஒரு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை நாம் எடுத்து பார்த்தோமேயானால் அவர்கள் 25 வயதிற்குள் தனது வாழ்க்கையில் எடுக்கக் கூடிய முடிவுகள் மிகவும் கவனமாக இருந்திருக்கும். நமது வாழ்க்கை எதனை நோக்கி செல்கிறது என்ற முடிவுகளை சரியாக எடுத்தால் போதும் வெற்றி அடைய முடியும்.
உங்களுடைய கல்வியில் மதிப்பெண்ணில் விழிப்புணர்வோடு இருப்பது முக்கியம். அதைவிட முகியம் உங்களுக்கான வாய்ப்புகளை தெரிந்து கொள்வதில் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். யார் தங்களுடைய வெற்றிக்கான வாய்ப்புகளை, வாழ்க்கைக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து தேடிக்கொண்டே இருக்கிறார்களோ அவர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் வருகிறது. அந்த வாய்ப்புகள் நிறைய பேர்களுக்கு தெரிந்திருப்பதில்லை.திறமை என்பது என்னவென்றால் எந்த ஒன்றை நாம் தொடர்ச்சியாக செய்கின்றோமே அப்போது அந்த செயலுக்கான திறன் நமக்கு வருகிறது. அதுதான் திறமை. பல நேரங்களில் திறமையானவர்கள் வெற்றி பெறுவது இல்லை. ஏனென்றால் அவர்கள் தொடர்ச்சியாக உழைப்பதில்லை. யார் தொடர்ச்சியாக ஒரு செயலை செய்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி அடைகிறார்கள்.
இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி. உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்கு இணையதளத்தில் நிறைய கற்றுக் கொள்வதற்கும் இந்த உலகை புரிந்து கொள்வதற்கும் நீங்கள் தினசரி குறைந்தபட்சம் 2 மணி நேரத்தில் 8 மணி நேரம் வரை செலவிடக் கூடிய இணைய உலகத்தில் நீங்கள் பாதுகாப்போடு இருப்பதற்கு நிறைய விழிப்புணர்வு, நிறைய அறிவுரைகள் தேவைப்படுகின்றன. நிறைய வாய்ப்புகள் குறித்த புரிதலும், விழிப்புணர்வுகளும் தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் ஆர்வத்தோடு பெற்றுக் கொள்ளக் கூடியவர்கள் வாழ்வில் சிறந்த வெற்றிகளை பெறக்கூடியவர்களாகவும், துன்பமில்லாத ஒரு வாழ்க்கையை வாழக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இளம் பெண்களாக நீங்கள் அனைவரும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக மாணவியர்களுக்கு “சாதிக்கலாம் வாங்க” என்ற தலைப்பில் உயர்கல்வி மற்றும் வேலைவழிகாட்டி புத்தத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply