சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான ‘பசுமை சாம்பியன்’ விருதுகள் மற்றும் தலா ரூ.1 இலட்சம் பரிசுத்தொகைகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் (12.03.2026) மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில், மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனிநபர், அமைப்பு, கல்வி நிறுவனம் என மூவருக்கு 2025 ஆம் ஆண்டிற்கான ‘பசுமை சாம்பியன்’ விருதுகள் மற்றும் தலா ரூ.1 இலட்சம் பரிசுத்தொகைகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு சட்டமன்றத்தில் 03.09.2021 அன்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, மாநில அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குச் சிறந்த பங்களிப்பை வழங்கும் 100 தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் 'பசுமை சாம்பியன் விருது' மற்றும் தலா ரூ. 1 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2025-ஆம் ஆண்டிற்கான விருதுநகர் மாவட்ட அளவிலான வெற்றியாளர்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு தேர்வு செய்தது. அதன்படி, இன்று நடைபெற்ற விழாவில், தேர்வு செய்யப்பட்ட திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த திரு.மாரியப்பன் என்பவருக்கு தனிநபர் பிரிவிலும், சிவகாசி பேஸ்புக் பிரண்ட்ஸ் என்ற அமைப்புக்கும், மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த திருமதி சுதா என்வருக்கு கல்வி நிறுவன பிரிவிலும் என மூன்று வெற்றியாளர்களுக்குப் பசுமை சாம்பியன் விருது மற்றும் தலா ரூ. 1 இலட்சத்திற்கான காசோலையினை நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் (TNPCB) மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த விருதுகள், கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் காட்டும் முன்மாதிரியான முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு, நீர்நிலை பாதுகாப்பு மற்றும் மரம் நடுதல் போன்ற பணிகளில் தீவிரமாகப் பங்காற்றியதற்காக இவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிகழ்வில் திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்) திரு.சு.இலக்குவன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.ஹேமந்த் ஜோசன்(தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், விருதுநகர்), காரியாபட்டி பேரூராட்சி தலைவர் திரு.செந்தில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply