தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம்.
விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்- 2026-க்கான அறிவிப்பை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் ,மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S.,அவர்கள் தலைமையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கபட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அனைத்து அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்பான முறையில் கடைபிடிக்க வேண்டும். பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் சுவர் விளம்பரம் வரைதல், சுவரொட்டிகள், காகிதங்கள் ஒட்டுதல் அல்லது கட் அவுட்கள் கட்டுதல், பேனர்கள், தட்டிகள் வைத்தல் எதையும் செய்யக் கூடாது.தனியார் இடங்களில் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் தனியார் சுவர்களில் உரிமையாளர்களின் அனுமதியுடன் கூட சுவர் விளம்பரங்கள் செய்யக் கூடாது. கிராமப் புறங்களில் தனியார் சுவர்களில் உரிமையாளர்களின் அனுமதியையும், உரிய அரசு அலுவலரின் முன் அனுமதியையும் பெற்ற பின்னரே சுவர் விளம்பரம் செய்திடலாம். இத்தகைய விளம்பரங்கள் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
அரசுக்கு சொந்தமான அரங்குகள்/கூட்ட அரங்குகள் உள்ளாட்சி அதிகாரத்திற்குட்பட்ட இடங்கள், கூட்டுறவுத் துறை இடங்களில் அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை. கல்வித்துறை நிறுவனங்கள் / மைதானங்கள் நடவடிக்கைகள் ஊர்வலங்கள் நடத்த அனுமதியில்லை.உரிய அனுமதி பெறாமல் வணிக நோக்கிலான வாகனங்களில் கொடிகள், ஸ்டிக்கர்கள் ஒட்டி விளம்பரம் செய்யக் கூடாது. வாகனத்தின் வெளிப்புற அமைப்பை மாற்றுதல் மற்றும் ஒலி பெருக்கி பொருத்துதல் ஆகிய செயல்கள் மோட்டார் வாகன சட்டத்தின் சரத்துகள் படியும், உள்ளுர் சட்டங்கள் / விதிகளின்படியும் தான் இருக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்டு உரிய அதிகாரியிடம் அனுமதி பெற்ற பின்னரே "வீடியோ ரதம்" போன்ற மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்கள் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த வேண்டும்.
பிரச்சார கூட்டங்கள் / ஊர்வலங்கள் / தற்காலிக கட்சி அலுவலகங்கள் மற்றும் பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி பெற கோரும் அரசியல் கட்சிகள் / அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், தங்களது மனுக்களை 48 மணி நேரத்திற்கு முன்பு https://suvidha.eci.gov.in/login/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் தாக்கல் செய்திட வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்வது கூடாது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பிரச்சாரங்கள், கூட்டங்கள் நடத்த வேண்டும். தேர்தல் கூட்டங்கள் நடைபெறும் இடம் நேரம் குறித்து உரிய முன் அனுமதியும் பெறப்பட வேண்டும்.பொது மக்கள் தேர்தல் குறித்து புகார் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வரும் கட்டணமில்லா எண் 1800 425 2166 மற்றும் 04562 -294067, 04562 -294068, 04562-294069, 04562 -294070 ஆகிய தொலைப்பேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகார்களை தெரிவிக்க, cVIGIL என்ற பிரத்யேக புதிய செயலியை அறிமுகப்படுத்தி பயன்பாட்டில் உள்ளது. இச்செயலி மூலம் பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் புகார்களை பதிவு செய்யலாம். தேர்தல் தொடர்பாக தெரிவிக்கும் புகார்களுக்கு 100 நிமிடத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எனவே, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து நடத்தை விதிகளை பின்பற்றி எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் நேர்மையான, அமைதியான, முற்றிலும் சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு உரிய ஒத்துழைப்பு நல்குமாறு அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், உட்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply