எதிர்வரும் சட்டமன்றத்தேர்தல்-2026னை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில்(16.03.2026) இந்திய தேர்தல் ஆணையத்தால், சட்டமன்றத்தேர்தல்-2026 க்கான, அறிவிப்பை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன,த.கா.ப, அவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S ., அவர்கள் தலைமையில் (16.03.2026) செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்ட மன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி, வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள் 30.03.2026. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026. வேட்பு மனுக்கள் பரிசீலனை நாள் 07.04.2026. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் 09.04.2026. வாக்குப் பதிவு நாள் 23.04.2026. வாக்குகளை எண்ணும் நாள் 04.05.2026. தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் நாள் 06.05.2026 ஆகும்.
மேற்படி, தேர்தல் தேதி வெளியிடப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் அறிவிப்பு வெளியான நாளான 15.03.2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் தேர்தல் நடத்தை விதிகளைக் கடைபிடித்து, எதிர்வரும் தமிழ்நாடு சட்ட மன்ற பொதுத் தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தேர்தல் நடத்தை விதிகளின்படி, மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சிப் பகுதியில் பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்தல், போஸ்டர் ஒட்டுதல், சுவரில் எழுதுதல் ஆகியவை செய்யக்கூடாது. கிராமப்புறங்களில் தனியார் கட்டிடங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்வதற்கு சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் அனுமதி அளிக்கும் நேர்வில், அவ்விளம்பரம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் விளம்பரம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்களை நடத்தவும், வாகனங்களைப் பயன்படுத்தவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே கூட்டங்களை நடத்தவும், வாகனங்களை உபயோகிக்கவும் முடியும்.தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும் அவர்களது படைக்கலன்களை அவர்களது காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்குமாறும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் படைக்கலன்களை வைத்திருத்தல், எடுத்துச் செல்லுதல் ஆகியவை தடைசெய்து ஆணையிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 14,97,417 உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,28,539, பெண் வாக்காளர்கள் 7,68,632, இதர வாக்காளர்கள் 246 ஆக மொத்தம் 14,97,417 வாக்காளர்கள் உள்ளனர்.அதில், 202-இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் 1,03,236 ஆண்களும், 1,08,951 பெண்களும், 33 இதர பிரிவினரும் என மொத்தம் 2,12,220 வாக்காளர்களும், 203-ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1,08,109 ஆண்களும், 1,14,218 பெண்களும், 40 இதர பிரிவினரும் என மொத்தம் 2,22,367 வாக்காளர்களும், 204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1,10,693 ஆண்களும், 1,17,207 பெண்களும், 63 இதர பிரிவினரும் என மொத்தம் 2,27,963 வாக்காளர்களும், 205-சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் 1,09,420 ஆண்களும், 1,16,013 பெண்களும், 28 இதர பிரிவினரும் என மொத்தம் 2,25,461 வாக்காளர்களும்,
206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் 96,436 ஆண்களும், 1,02,141 பெண்களும், 39 இதர பிரிவினரும் என மொத்தம் 1,98,616 வாக்காளர்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,00,000 ஆண்களும், 1,06,468 பெண்களும், 29 இதர பிரிவினரும் என மொத்தம் 2,06,497 வாக்காளர்களும், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் 1,00,645 ஆண்களும், 1,036,34 பெண்களும், 14 இதர பிரிவினரும் என மொத்தம் 2,04,293 வாக்காளர்களும், என ஆக மொத்தம் விருதுநகர் மாவட்டத்தில் 7,28,539 ஆண்களும், 7,68,632 பெண்களும், 246 இதர பிரிவினரும் என ஆக மொத்தம் 14,97,417 வாக்காளர்கள் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 14,97,417 வாக்காளர்களில், 45 வாக்காளர்கள் 100 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், 12,336 வாக்காளர்கள் மாற்றுத்திறனாளி வாக்காளர்களாகவும், 246 வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர்களாகவும், 7,805 வாக்காளர்கள் 85 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், 3,367 வாக்காளர்கள் Service Voters-ஆகவும் உள்ளனர். மேலும், 7 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள மொத்தம் உள்ள 2,001 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்படி கட்டாயம் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை விசாரணை செய்யவும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 9 குழுக்கள் வீதம் 63 பறக்கும் படை குழுக்களும், 63 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.
இத்தேர்தல் பணியில் 9.600 வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள C-Vigil App செயலியிலும் புகார் அளிக்கலாம். இந்த செயலி மூலம் பெறப்படும் புகார்களின்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை deo.virudhunagar26@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 1800 425 2166, 04562-294067, 04562-294068, 04562-294069, 04562-294070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் 24 மணி நேரமும் இயங்கி வரும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply