தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள் சிவகாசி ரயில் நிலையத்திற்கான புதிய வழித்தட பேருந்து சேவையினை தொடங்கி வைத்தார்.
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தலைமையில் சிவகாசி என்.ஆர்.கே.ராஜரத்தினம் பேருந்து நிலையத்தில் சிவகாசி ரயில் நிலையத்திற்கான புதிய வழித்தட பேருந்து சேவையினை (23.07.2026) தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.
பொதுமக்களின் போக்குவரத்து வசதியினை மேம்படுத்திடவும், பாதுகாப்பான போக்குவரத்தினை உறுதி செய்திடவும் அதிக முன்னுரிமை எடுத்து விபத்தில்லா தமிழகம் என்ற நிலையினை எய்திட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கிராம பொதுமக்கள் பணியின் காரணமாக நகரங்களுக்கும், நகரங்களை கிராமங்களோடு இணைப்பதற்கும் பொது போக்குவரத்துத்துறையின் செயல்பாடுகள் இன்றியமையாததாக உள்ளது.
சிவகாசி மாநகராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிவகாசி என்.ஆர்.கே.ராஜரத்தினம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவகாசி ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு பேருந்து வசதி இல்லாத நிலையினை சீர்படுத்தும் வகையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விரைந்து அனுமதி அளிக்கப்பட்டது. இதுநாள் வரை பொதுமக்கள் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் ஆட்டோ, இரண்டு சக்கர வாகனம் மற்றும் இதர தனியார் வாகனங்கள் மூலமாக சென்றனர். இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் செலவினமும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வந்தனர். இந்த சூழ்நிலையை மாற்றிடும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் புதிய வழித்தட பேருந்து வசதி துவக்கி வைக்கப்படுகிறது. தினமும் இப்பேருந்தானது 10 முறை இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.பொதுமக்களின் தேவையினை அறிந்து நிறைவேற்றுவதில் எவ்வித சமரசமுமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பொதுமக்களிடம் பேருந்து வசதி செய்து தரப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.பொதுமக்கள் பேருந்து வசதியினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., விருதுநகர் மண்டல பொது மேலாளர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்) திரு.கே.கண்ணன், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன், உதவி மேலாளர் (வணிகம்) திரு.எஸ்.நாகராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply