இராஜபாளையம் நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (09.06.2026) நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - தரப் பரிசோதனை:
ஆய்வு செய்த இடம்: இராஜபாளையம் நாடார் துவக்கப்பள்ளி.
ஆய்வு விவரம்: பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுவை மற்றும் அளவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்து பள்ளி சமையலறையை எப்போதும் மிகத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். குழந்தைகளுக்குக் கால அட்டவணைப்படி (Menu) சத்தான, சுவையான உணவைத் தடையின்றி வழங்க வேண்டும். காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களின் தரத்தினை பள்ளித் தலைமை ஆசிரியர் தினசரி கண்காணிக்க வேண்டும் என உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
சீரான குடிநீர் விநியோகம் & குளோரின் அளவு ஆய்வு:
ஆய்வு செய்த இடம்: குறிஞ்சி நகர் பகுதி.
ஆய்வு விவரம்: பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் மற்றும் விநியோகிக்கப்படும் கால அளவு குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். மேலும், நீரிலுள்ள குளோரின் (Chlorine) அளவு சரியான விகிதத்தில் உள்ளதா என சோதனை செய்யப்பட்டது.கோடைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றிச் சீரான குடிநீர் விநியோகத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். குழாய் உடைப்புகள் அல்லது குடிநீர் வீணாகுதல் போன்ற புகார்கள் வந்தால் 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அம்ரூட் 2.0 திட்டம் – புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்:
திட்ட மதிப்பு: ரூ.27.25 கோடி
ஆய்வு விவரம்: இராஜபாளையம் நகராட்சியின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, மத்திய-மாநில அரசின் கூட்டு நிதி பங்களிப்புடன் (Amrut 2.0) கட்டப்பட்டு வரும் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளைப் பார்வையிட்டார்.கட்டுமானப் பணிகளில் எவ்விதத் தொய்வும் இன்றி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். சுத்திகரிப்பு இயந்திரங்களின் தரம் மற்றும் சிவில் கட்டுமானப் பணிகளின் நிலைத்தன்மையை (Quality Control) பொறியாளர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதிநவீன அறிவுசார் மையம் (Intellectual Centre / Library):
நகராட்சியில் நகர்ப்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி (UIDF) 2025-2026 ன் கீழ் ரூ.2.15 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
நுண் உரம் செயலாக்க மையம்:
இராஜபாளையம் நகராட்சியில் செயல்பட்டு வரும் 5 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நுண் உரம் செயலாக்க மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது இம்மையத்திற்கு நகராட்சி வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதைப் பார்வையிட்டார்.
பிரதான குடிநீர் நீரேற்று நிலையம்:
பின்னர், இராஜபாளையம் நகராட்சிக்கான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.200.06 கோடியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் கட்டப்பட்டு இயங்கி வரும் பிரதான குடிநீர் நீரேற்று நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
முன்னதாக, இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வின் போது, இராஜபாளையம் நகராட்சி ஆணையர், நகராட்சிப் பொறியாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய (TWAD) அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply