கல் குவாரி தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள், வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து திடீர் கள ஆய்வு.
தமிழ்நாடு முழுவதும் அரசு அனுமதி பெற்று செயல்பட்டு வரும் கல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கனிமங்கள் வெட்டப்படுவதாகவும், பல இடங்களில் சட்டவிரோத குவாரிகள் செயல்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குவாரிகளையும் ஆய்வு செய்து உடனடி அறிக்கை சமர்ப்பிக்குமாறு புவியியல் மற்றும் சுரங்கத்துறை மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், மேலூர் துரைசாமிபுரம் கிராமம், அரசு புறம்போக்கு நிலம் புல எண் 328 (Part-V)-ல் செயல்பட்டு வந்த கல் குவாரி தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள், வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
திருமதி கா.செல்வி என்பவருக்கு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், 1959-ன் கீழ் குத்தகையாக வழங்கப்பட்டிருந்தாலும், குத்தகை ஒப்பந்த பதிவு பணிகள் முழுமையாக நிறைவு பெறுவதற்கு முன்பே குவாரி பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும், அனுமதியின்றி வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டு கல் வெட்டும் இயந்திர செயல்கள் மற்றும் வெடி வெடிப்பு பணிகள் நடைபெற்றதாகவும் தெரியவந்தது.இத்தகைய நடவடிக்கைகள் சட்டவிரோத கனிம வெட்டும் செயலாக கருதப்படுவதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தக்கூடிய மிகக்கடுமையான விதிமீறலாகும்.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதுடன், ஆய்வின்போது கண்டறியப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பயன்படுத்தி குவாரி பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், உரிய அனுமதியின்றி வெடிபொருட்கள் வழங்கப்படுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரேனும் சட்டவிரோத கனிம வெட்டுதல், அனுமதியற்ற வெடிபொருள் பயன்பாடு அல்லது விதிமீறிய குவாரி செயல்பாடுகள் குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அல்லது புவியியல் மற்றும் சுரங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply