அற்புதங்கள் நிறைந்த சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோவில்.
முன் காலத்தில் சுசீந்திரம் என்ற ஊர், ஞானாரண்யம் என்று அழைக்கப்பட்டது. அங்கு அத்ரி முனிவர், தனது மனைவி அனுசூயாவுடன் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரையும், ஒரே இடத்தில் தரிசிக்க நினைத்த நாரதர், அதற்காக ஒரு கலகத்தை நடத்த முன்வந்தார். அந்த நேரத்தில் மும்மூர்த்திகளின் மனைவியரான பார்வதி,லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு, தங்களை விட கற்பில் சிறந்தவர்கள் யாரும் இல்லை என்ற கர்வம் ஏற்பட்டிருந்தது.
நாரதர் தன்னுடைய ஆசையின் வாயிலாக மும்பெரும் தேவியரின் கர்வத்தையும் அகற்ற எண்ணினார். முப்பெரும் தேவியர்களை சந்தித்த நாரதர், அவர்களிடம் அனுசூயாவின் பெருமையைப் பற்றி புகழ்ந்தார். இதனால் மூன்று தேவியர்களும், தங்கள் கணவர்களை அனுசூயாவின் இருப்பிடம் அனுப்பி, அவளது பதிவிரதை தன்மையை சோதிக்கும்படி அனுப்பினர். அதன்படி ஞானாரண்யம் வந்த மும்மூர்த்திகளும், முதியவர் வேடத்தில் அனுசூயாவின் ஆசிரமம் முன்பு நின்று யாசகம் கேட்டனர்.
மேலும் 'ஆடை அணிந்தவர்களிடம் நாங்கள் உணவை ஏற்பதில்லை" என்றும் கூறினர். இதையடுத்து அனுசூயா தேவி, தன்னுடைய தவ வலிமையால், அத்ரி முனிவரின்கமலண்டல நீரைக் கொண்டு, மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக மாற்றினார். பின்னர் அவர்கள் விருப்பப்படியே ஆடையின்றி அமுது ஊட்டி பசியாற்றினார். பின்னர் மூன்று கடவுளரையும், தொட்டிலில் கிடத்தி தூங்கச் செய்தார். இந்நிலையில் தங்கள் கணவரைக் காணாமல், முப்பெரும் தேவியரும் பதறினர். நடந்ததை அறிந்ததும், உடனடியாக அனுசூயாவிடம் வந்து, தங்களின் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, தங்கள் கணவர்களை சுய உரு பெறச் செய்யும்படி வேண்டினர். அதன்படியே அனுசூயா, மும்மூர்த்திகளுக்கும் சுய உரு வழங்கினார்.
இதையடுத்து மும் மூர்த்திகளும் தங்களின் மனைவியருடன் ஒரே இடத்தில் காட்சி கொடுத்தனர். அந்தக் காட்சியை நாரதரும் கண்டு மகிழ்ந்தார். பின்னர்அங்கிருந்த கொன்றை மரத்தடியில் மூன்று லிங்கங்கள் தோன்றின. தற்போது சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்தாலும், ஆதிக் கோவிலான கொன்றையடி நாதர் சன்னிதி, முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கருவறையில் தாணுமாலயன் என்ற பெயரில் மும்மூர்த்திகளும் ஓர் உருவாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
0
Leave a Reply